யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள்
யாழ்ப்பாணத்தில் தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (25.02.2024) காலை10.30 மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
முன்மொழிவுகள்
இந்த நிகழ்வில் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறீநேசன், பாக்கியசெல்வம் அரியேந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளின் உரைகளும், தமிழ்த் தேசியம் சார்ந்த கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், தடைகளை வெல்லும் தமிழ்த் தேசிய நிகழ்வு மூலம் தெரிந்து கொள்ள வேண்டியதும் செயற்ப்படுத்த வேண்டியதுமான முன்மொழிவுகளாக இவை முன்வைக்கப்பட்டுள்ளன.
1. தமிழ்த் தேசியம் மட்டுமே தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றும் அதுவே எம் இருப்பின் தாரக மந்திரமும் ஆகும் .
2. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில் அதன் எதிர்பார்க்கைகளோடும் முன்வைப்பதனை இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
3. மக்களுக்கான புதிய அரசியல் உந்து சக்தியாக இளைய தலைமுறையை முன்னிறுத்தி அரசியல் களப்பணியை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிப்பதை இம்மாநாடு முன்மொழிகிறது.
4. ஆயுதப்போர் மௌனிக்கச் செய்யப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதையும் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய நடைமுறைப்படுத்தப்படும். பிரித்தாளும் தந்திரோபாய வழிமுறைகளும்,பற்றிய விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு முன் அமர்த்தப்படுவதை இம்மாநாடு முன்மொழிகிறது.
5. ஆயுதப்போர் மௌனித்துப் போனாலும் ஒன்றரை தசாப்தம் கடந்தும் யுத்தத்தால் பாதிப்புற்று இன்றுவரை மீள முடியாத வாழ்வியல் அவலத்தில் உழலும் மக்களின் மீட்சியை உறுதிப்படுத்தவும் அவர்கள் தமது சொந்தக் காலில் நிலைபெறவும் நடைமுறைச் சாத்தியமான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல் படுத்தப்படுவதை தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு முன்மொழிகின்றது .
6. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத தாயக பூமியாகும். இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் அனைத்துத் தளங்களிலும் உறுதிப்படுத்தப்படுவதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
7. தமிழ்த் தேசிய எழுச்சியின் குரல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் சமூகங்களின் உரிமை, இருப்பு, அரசியல், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, விழுமியம், சமயம், கலை, கலாச்சாரம், இலக்கியம், ஊடகம், தொழில்வாய்ப்பு, நிலம், நிருவாகம் சார்ந்த அனைத்திலும் தனித்துவமாக உறுதிப்படுத்தப்படுவதை ஆதரித்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
8. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாசைகள் அரசியல் வியாபாரிகளின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு இளைய தலைமுறையின் பங்கு பற்றுதலோடு மக்களின் குரலாக தேசிய அளவில் மாற்றப்படுவதையும் போலி தமிழ் தேசியவாதிகளின் பிடியிலிருந்து தமிழ் தேசிய அரசியலை மீட்டு அதன் தூய வடிவில் இளம் தலைமுறையிடம் கையளிப்பதையும் இம்மாநாடு ஆதரிக்கின்றது
9. துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்ட பேரவை ஸ்தாபிக்கப்பட்டு அறிவார்ந்த வழிகாட்டுதல்களை துறை சார்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு தமிழ் தேசியத்தின் கனவுகளையும் லட்சியங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான சாதகமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை இம் மாநாடு முன்மொழிகிறது
10. தமிழ் தேசத்தின் தவிர்க்க முடியாத ஜீவ நாடியாக திகழும் பெண்களின் பங்கு பற்றுதலை அனைத்து துறைகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இம் மாநாடு ஆழமாக வலியுறுத்துகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







