பாரிய நிலப்பரப்பில் விகாரை அமைக்க திட்டம் - ஜனாதிபதி அதிருப்தி (Video)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது “முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.
எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை.” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எச்சரித்த ஜனாதிபதி
இவற்றை கருத்திற்கொண்டு கலந்துரையாடலில் காணி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
"தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுகின்றார்கள். இந்த விடயத்தில் நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? '' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம்,'எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.'' என தெரிவித்தார்.
எனினும் அது அமைச்சரவையின் கொள்கைகளின் பிரகாரம் அமைந்துள்ளது. அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.
விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு
மேலும், விகாரையொன்றை அமைப்பதற்கு 220 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் நிலப்பரப்பே காணப்படும்.
அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று இந்த கலந்துரையாடலின் போது வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி உறுதியளித்தார்.
3000 ஏக்கர் காணி
இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,
''பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.
பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளார்.
கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டார், '' என சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ''அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது.'' என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |