தமிழர்களின் போராட்டத்தின் அடையாளமே மே 18..! கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுகூரல்
தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவனிட்டா நாதன் ஆகியோரினால் தலைமையில், ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.
அத்துடன், ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழினப் படுகொலையில் பிரகடனம்
இதேவேளை, லிபரல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவூத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி உரையாற்றுகையில், “தமிழ் மக்களின் உரிமை, தமிழ் மொழியின் உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் எமது நிலம் மற்றும் கலாசார உரிமைகளுக்காக பல தசாப்தங்களாகத் தமது உயிரைத் தியாகம் செய்தவர்களின் உறுதிப்பாடு தான் மிக முக்கியமானது.
கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர், இந்த அறையில் கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய பாதையில் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர். பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பயணம் என்பது இன்னும் முடியவில்லை. அது தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்பட வேண்டியது.

கடந்த 2022ஆம் ஆண்டு கனடிய நாடாளுமன்றத்தில் மே 18ஆம் திகதியை தமிழினப் படுகொலையாக பிரகடனம் செய்யப்பட்டமை, இலங்கை அரசத் தலைவர்கள் மீதான தடை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான மைய குழுவில் கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் பார்க்கக் கூடியதாக உள்ளது.
தமிழர்களின் போராட்டத்தின் அடையாளம்
இதனைத் தொடர்ந்து மொன்ரியல் நகரசபை உறுப்பினரான மிலானி தியாகராஜா உரையாற்றுகையில்,
மே 18ஆம் திகதி நினைவூகூரல் என்பது தமிழர் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஒரு துயர் மிகுந்த நாள் என்றும், கனடாவில் உள்ள தமிழர்களுக்கு இதுவொரு நெருக்கமான வரலாறு என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தமிழர்களின் போராட்டத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது என்றார்.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட் ஜீனஸ் கருத்து தெரிவிக்கையில், இனப்படுகொலைக்குள்ளான இனமொன்றினைச் சேர்ந்தவரான தன்னால் இந்த நீதிக்கான பயணத்தை புரிந்துகொள்ள முடியும் என்றார்.
நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்