சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை முத்தமிழ்விழா
2025 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா கடந்த 13 செப்டெம்பர் 2025, சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் Makthalle Burgdorf மண்டபத்தில் தமிழர் பாரம்பரிய இசையுடன் தொடங்கி மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்தவிழா தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் பெருவிழாவாக இடம்பெற்றுள்ளது.
முத்தமிழ் விழா
தமிழ்க் கல்விச்சேவையின் முப்பதாவது ஆண்டு சேவையைச் சிறப்பிக்குமுகமாக, அதன் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் காணொளிக்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, தமிழ்ப்பள்ளிகளின் சுருக்க வரலாறுகள் அடங்கிய 30 ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும் மதிப்பளிப்பு நிழற்படங்கள் அடங்கிய முத்தமிழ்விழா மலரும் வெளியிடப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டவரும் மொழி பண்பாட்டு நிறுவனத்தின் (ILC) தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியை நிறைவுசெய்த முதல்தொகுதி மாணவர்களுக்கான பட்டயமளிப்பு நிகழ்வும் இவ்விழாவில் இடம்பெற்றது.
ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலே மேற்கொள்ளப்பெற்ற இப்பட்டயக்கல்வியில் சுவிற்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 ஆசிரிய மாணவர்கள் பட்டயத்தைப் பெற்றிருந்தார்கள்.
தமிழ்ச்சுடர்
அத்தோடு, ILC இலே இணைந்து தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் வெளிநாட்டவருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
2025ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கல்வியில் ஆண்டு 10, ஆண்டு 12 சித்திபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன.
25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்களுக்கு 'தமிழ்ச்சுடர்' என்ற உயரிய விருதும் 25 ஆண்டுகள் பணிநிறைவினைச் செய்த ஆசிரியர்களுக்கு 'தமிழ்மணி' என்ற உயரிய விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பெற்றது.
ஐரோப்பிய பொது மொழிக்கட்டமைப்பிற்கு அமைய தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 10 சித்தியடைந்த மாணவர்களுக்கு B1 தரச்சான்றிதழும் ஆண்டு 12 சித்தியடைந்த மாணவர்களுக்கு C1 தரச்சான்றிதழும் ILC ஊடாக வழங்கப்பெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறைக்கான www.tess-sports.ch எனும் பதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பெற்றது.
முத்தமிழ் விழாவின் அனைத்துப் பணிகளிலும் இளையோர் உள்வாங்கப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தனர்.
முப்பது ஆண்டு வரலாறு
பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2025 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் தக்கவாறு கையளிக்கப்படுகின்ற செய்தியையும் தமிழ்மொழியைத் தமிழர் அல்லாதோருக்கும் கற்பித்துத் தகைநிறை சான்றிதழினை வழங்கக்கூடிய மொழி பண்பாட்டு நிறுவனம் ஒன்றையும் தமிழ்க் கல்விச்சேவை தன் முப்பது ஆண்டு வரலாற்றில் உருவாக்கியிருக்கிறது என்ற செய்தியையும் வெளிப்படுத்திநின்றது.
இவ்விழா சிறப்புறக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.


















பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
