இந்திய பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள, தமிழ் பேசும் சமூக கோரிக்கையின் தற்போதைய நிலை!
இலங்கையில் வாழும் மூன்று சமூகங்களினதும் அபிலாசைகள் மற்றும் மக்களின் அரசியல் நோக்கங்கள் மாற்றப்படாத வகையில், அந்த சமூகங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து 13ஆவது அரசியமைப்பை பாதுகாக்கும் ஆவணத்தில், கையெழுத்திட்டு இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் அண்மை காலமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் அமர்வுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், இறுதியாக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மையில் ஒன்றுக்கூடி, ஆவணம் ஒன்றை தயாரித்தன
இதன்பின்னர், அந்த ஆவணத்தில் தமிழரசுக்கட்சியின் யோசனைகளும் சேர்க்கப்பட்டு, கட்சிகளின் பார்வைக்காக அந்த ஆவணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது குறித்த ஆவணத்தில் கையெழுத்திடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.
அத்துடன் சுயநிர்ணய உரிமை தொடர்பான ஆவணத்தில் தாம் கையெழுத்திடப்போவதில்லை என்றும் 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயம் தொடர்பில் தாம் கையெழுத்திடமுடியும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாறு பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்
இந்த சூழ்நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முனைப்பை நகர்த்துவது தொடர்பில் எமது செய்திசேவை வினவியபோது கருத்துரைத்த சுமந்திரன், வடக்குகிழக்கு மலையகம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
எனினும் இதன்போது ஒரு சமூகத்துக்காக மற்றும் ஒரு சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் அரசியல் நோக்கங்களை திசைதிருப்புவது அவசியமில்லை.
எனவே தற்போது வடக்குகிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை தக்கவைத்துக்கொள்வற்காக ஒரு சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு ஏனைய சமூகங்கள் தமது ஆதரவை வழங்கும் வகையில் ஆவணம் ஒன்றில் அனைத்து கட்சிகளும் கையெழுத்திட முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தமது தனிப்பட்ட இந்த யோசனை, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் அமர்வுகளை ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.