ரணிலின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்
அரசியல் பழிவாங்கல் சம்பந்தமாக விசாரணை நடத்திய ஆணைக்குழு தனக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரையை செல்லுப்படியற்றது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த மனுவை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த மனு நிஸ்சங்க பந்துல கருணாரத்ன, லாபீர் தாஹீர் மற்றும் டி.எம்.சமரகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்களின் அமர்வின் முன் இன்று ஆராயப்பட்டது.
இதன் போது மனுதார் சார்பில் நேர்நிலையான சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுக்குமாறு அறிவித்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் தடுப்பு செயலகம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களுக்கு தான் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு தனக்கு எதிராக சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக மனுதாரான ரணில் விக்ரமசிங்க மனுவில் கூறியுள்ளார்.
தான் பிரதமராக பதவி வகித்த போது ஊழல் தடுப்பு செயலகம் தனது பொறுப்பின் கீழ் இயங்கவில்லை எனவும் அதன் நடவடிக்கைகளில் தான் தலையிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு செயலகம் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், பல்வேறு நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்ச ஆணைக்குழு போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்களே வழக்குகளை தொடர்ந்தன எனவும் ரணில் தனது மனுவில் கூறியுள்ளார்.