யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஐவர் கைது
ஆவா என்று அழைக்கப்படும் வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலினால் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்று நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனி குழுவுக்கும் ஆவா குழுவுக்கும் இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத்
தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.



