பால்டிக் கடலில் போலி கொடியுடன் அத்துமீறி நுழைந்த கப்பல் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
பால்டிக் கடல் பகுதியில் ஸ்வீடன் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 'கஃப்பா' (Caffa) என்ற சரக்குக் கப்பலை சுவீடன் கடலோர காவல்படை மற்றும் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றினர்.
இந்தக் கப்பல் கினியா (Guinea) நாட்டின் கொடியைப் பயன்படுத்தி வந்தாலும், உண்மையில் இது எந்த நாட்டையும் சாராத 'நாடற்ற கப்பல்' (Stateless vessel) என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துமீறி நுழைந்த கப்பல்
மார்ச் 7, 2026 அன்று சுவீடனின் தெற்கு நகரமான ட்ரெல்பேர்க்கிற்கு (Trelleborg) அருகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கப்பல் உக்ரைனின் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் உள்ள ஒரு ரஷ்ய 'நிழல் கப்பல்' (Shadow fleet) என்றும், இது திருடப்பட்ட உக்ரைனிய தானியங்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் இருந்த 11 மாலுமிகளில் பெரும்பாலானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று சுவீடன் பொலிஸ் துணைத் தலைவர் ஜோஹன் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
சுவீடன் அதிரடி
கப்பலை ஆய்வு செய்ததில், அது கடல் பயணத்திற்குத் தகுதியற்ற நிலையில் இருப்பதும், முறையான காப்பீடு இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறிய செயலாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக, கப்பலில் இருந்த ஒரு மாலுமி மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ரஷ்யக் கொடியில் இருந்து கினியாவிற்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் குறித்து சுவீடன் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.