ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் வெளிநாட்டு தலையீடா என்ற சந்தேகம்
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் விடயத்தில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கின்றதா என்பது குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு அந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பந்தமாக தான் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பது ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உறுதியாகி இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் வெளியானதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அலரி மாளிகையில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு இணங்க இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராபோசன விருந்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ரணில், முன்னாள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.