அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே அவை தொடர்பில் பொலிஸார் பல்வேறு விசாரணைகளையும் கைது நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு்ள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் காரில் சென்றுகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-கஜிந்தன்
யாழில் கஞ்சா விற்பனை
யாழ்.நவகிரி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு கிராம் கஞ்சாவுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை செய்த 28 வயதுடைய பெண்ணொருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து 157 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-கஜிந்தன்
வெளிநாட்டு தம்பதியிடமிருந்து திருட்டு
பிரித்தானிய தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய இளைஞர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியா தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா என்பன திருடப்பட்டுள்ளன.
மறைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு
திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டடுள்ளன.
சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்புப் பெட்டகத்தை கடலில் வீசியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ராகேஷ்