பல தகவல்கள் வெளியாகும் - சுரேஸ் சாலே கைது தொடர்பில் சற்றுமுன் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் விசாரணைக்காக 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்றும் பொலிஸார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விசாரணை
அத்துடன் இது தொடர்பாக நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால், எதிர்காலத்தில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

சில மணி நேரங்களுக்குள் காரணத்தை வெளிப்படுத்துவது கடினம் என்றும், பொலிஸார் தமது கடமையை முறையாக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை முறையாக வெளியிடாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால் பொலிஸாருக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சுரேஷ் சாலே கைது செய்யப்படாவிட்டால், பொலிஸாருக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுரேஷ் சாலேவிடம் எதிர்காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் போது ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர் பற்றிய தகவல்கள் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.