காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர்
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக வீதியில் பயணித்த வாகனங்கள் ஒலி எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலுக்கு முன்னால் உள்ள வீதியில் பெருமளவான மக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக வெளியேறுமாறு கோரி இன்று காலை முதல் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் வீதியின் இருமருங்கிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக வீதியில் பயணித்த வாகனங்கள் ஒலி எழுப்பி தமது ஆதரவை ஆர்ப்பாட்டக்கார்களுக்கு தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தற்போது விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் ஊடாக கொழும்பு நோக்கிச் பேரணியாக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.



