திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விவகாரம்! உடன்படிக்கைகளில் மிக மோசமான சூழ்ச்சிகள்?
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் வழங்குவது முட்டாள்தனமான தீர்மானம் என தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் பேச்சாளர் டொக்டர் வசந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த எண்ணெய் தாங்கிகளை வழங்குவது குறித்த மூன்று உடன்படிக்கைகள் காணப்படுகின்றன.
இரண்டு உடன்படிக்கைகள் பற்றிய விபரங்கள் மட்டுமே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கட்டமைப்பு உடன்படிக்கை, வரி குறித்த உடன்படிக்கை மற்றும் பங்குகளை விற்பனை செய்தல் குறித்த உடன்படிக்கை என மூன்று உடன்படிக்கைகள் காணப்படுகின்றன.
இந்த எண்ணெய் தாங்கிகளை வழங்குவதற்கு இந்தியாவின் முதலீடு என்ன? இது வெறுமனே எண்ணெய் தாங்கிகளை வழங்குவது மட்டுமல்ல.
உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றின் செயற்பாடுகளை அவர்களிடம் ஒப்படைப்பதாகும்.
இந்த உடன்படிக்கைகளில் மிக மோசமான தந்திரங்கள் சூழ்ச்சிகள் காணப்படுகின்றன.
இந்திய தரப்பு எவ்வளவு முதலீடு செய்கின்றது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை எனினும் லாபத்தில் 51 வீதம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
இதன் மூலம் யார் முகாமைத்துவம் செய்வார்கள் என்பது பற்றிய உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.
இந்த உடன்படிக்கை பற்றிய சரியான விபரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்படவில்லை. நாட்டு மக்கள் மட்டுமன்றி அமைச்சரவையும் ஏமாற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நாட்டு மக்களையும் அமைச்சரவையையும் முட்டாள்கள் என எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என டொக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு உதவிய அமைப்புக்களில் ஒன்றாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியம் கருதப்படுகின்றது.
இந்த நிலையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு குறித்த அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.