இலங்கை இசை உலகின் ஜாம்பவான் மறைவு - ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல்
இலங்கை இசை உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக போற்றப்பட்ட ஜிப்ஸீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவிற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் இசைக்குழு நிகழ்ச்சிகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், பல பிரபல பாடல்களை வழங்கிய சிரேஷ்ட பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்கு இரங்கல் வெளியிடுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இசைத்துறையில் குறிப்பாக மேடை இசைக் கலைத்துறையில் சுனில் பெரேராவின் வெற்றிடம் வலுவாக உணரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தனது இசைப் படைப்புக்களினால் சுனில் என்றென்றும் நம்மில் வாழ்வார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இசைத்துறையை புதிய பரிணமாத்திற்கு எடுத்துச் சென்ற மாபெரும் இசைக் கலைஞர் சுனில் பெரேரா என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஐந்து தசாப்தங்கள் இலங்கை இசைக்குழு கலைத்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகம் செய்து ரசிகர்களின் இதயங்களை ஸ்வரங்களால் ஸ்பரிசம் செய்த அற்புத இசைக்கலைஞர் சுனில் பெரேராவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் சுனில் பெரேராவின் மறைவிற்கு தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
