கிழக்கிலும் சிங்களமயமாக்கல் இடம்பெறுகின்றதா..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்களமயப்படுத்துகின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன்கொண்டு வரவில்லை? வடக்கில் எம்.சுமந்திரன் மற்றும் இங்கு உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி அடக்கி இந்த சிங்கள மயமாக்கலுக்கு துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று(10.05.2026) மட்டக்களப்பு - வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களை சந்திக்கும் நிகழ்வு கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியேற்றங்களை அமைத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த குடியேற்றங்கள் தென் தமிழ் தேசத்தில் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசத்திலும் இந்த திட்டங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்ற வேலைத்திட்டமானது மிக மோசமாக இருக்கின்றது. அம்பாறையையும் திருகோணமலையையும் அதில் இருந்து படிப்படியாக முன்னேற்றி மட்டக்களப்பை தனிமைப்படுத்திய பின்னர் மட்டக்களப்பில் கை வைக்கலாம் என்ற ஒரு திட்டம் காணப்படுகின்றது.
இன அழிப்பு
அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் பெரியளவில் குடியேற்றம் செய்ய முடியவில்லை. ஆனால் 2009க்கு பின்னர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த மக்களை அழித்து இன அழிப்பை செய்த பின்னர் இன்று மட்டக்களப்பில் கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.இது தான் உண்மை.

கிழக்கில் விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாவட்டத்தை சிங்கள மயப்படுத்த இந்த மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையை கைப்பற்றுவதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு பகுதியாக ராஜபக்ச தரப்பு மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சோளம் செய்கை என்ற பெயரில் போலியான உறுதிகளை வழங்கி சட்ட விரோதமாக சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஊத்துச்சேனை கிராமத்தையும் அதே வேலைத்திட்டத்துக்குள் கொண்டு வரப்படவுள்ளது.
சிங்கள மயமாக்கம்
மயிலத்தனை பிரச்சனையை கூட ஏன் மட்டக்களப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிக் கொண்டு வரவில்லை? தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மட்டக்களப்புக்கு வந்து இந்த பிரச்சனையை பற்றி கேட்டறிந்த பின்னரே அவர் அந்த விடயங்களை ஊடகத்துக்கு வெளிக் கொண்டு வந்தார்.
ஏன் இங்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை முன்கொண்டு வரவில்லை? அவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? அவர்கள் தான் வாக்கு கேட்கப் போகின்றனர்.

உங்கள் பிரச்சனையை முன் நின்று வெளிக் கொண்டு வரவேண்டியது அவர்களது பொறுப்பு. வடக்கில் இருக்கும் எம்.ஏ.சுமந்திரன் போல இங்கு உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி அவர்களை அடக்கி இந்த சிங்களமயமாக்கத்திற்குத் துணை போவதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்களா?
நான் கேட்பது தமிழ் தேசியம் பேசி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைப் பற்றிதான். எல்லையை பாதுகாத்தலானது, அந்த எல்லையில் இருக்க கூடியவர்களுக்கான வசதிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தால் மட்டும்தான் சாத்தியமாகும்.

நாங்கள் உங்களை தேடிவருவதற்கான காரணம் எங்களுடைய தமிழ் தேசத்தை பாதுகாப்பதற்காகவேயாகும்.
எல்லைகள் பாதுகாக்கப்படாது இருந்தால் எங்கள் தேசத்தின் நிலப்பரப்பு சுருங்கும் அது தான் எதிரியின் விருப்பமும் கூட, ஆகவே தான் எங்கள் மக்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்கு தேடிச் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என உறுதிமொழி வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam