காணி கபளீகரத்துக்கு எதிரானசுமந்திரனின் வழக்கு மீளபெறப்பட்டது!
வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளைக் கபளீகரம் செய்யும் இலக்கோடு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசு கடைசி நேரத்தில் திரும்ப பெற்றுக்கொண்டது.
அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர்நீதிமன்றத்தில் விலக்கிக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான சுமந்திரனுக்கு உள்ள உரித்துகளைக் கைவிடாமல் வழக்கை திரும்ப பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுனா ஒபயோசேகர, மேனக விஜயசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த அனுமதியை அளித்தது.
உயர்நீதிமன்ற அனுமதி
இந்த வழக்கை மனுதாரர் தரப்பில் முன்னின்று வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்குச் சமுகம் அளித்திருக்கவில்லை.
சுகவீனம் காரணமாக அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லக்ஷ்மணன் ஜெயக்குமார் மன்றில் தெரிவித்தமையோடு, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதன்படி, உரிய சமயத்தில் இடைக்காலத் தடை உத்தரவையும் விதித்த நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகனகேஸ்வரன் நேரில் பிரசன்னமாகி இன்று நன்றி தெரிவிக்க விரும்பினாராயினும், அவர் சுகவீனம் காரணமாக இன்று மன்றுக்கு வரவில்லை என்றும், தமது நன்றியை நீதிமன்றில் பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் சட்டத்தரணி லக்ஷ்மணன் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதேவேளை, அரசு தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுரேகா அஹமத் முன்னிலையாகி இருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |