பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி விவகாரம்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை (05.08.2023) காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு
வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.
சங்கமித்த இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த கலந்துரையாடலை கூட செய்யாது எதேச்சதிகாரமான முறையில் இந்த சிங்கள அரசு திட்டமிட்ட பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல்
ஆகவே தொடர்ச்சியாக சிங்கள அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.
ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



