படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(24) காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பனவற்றின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
திருவுருவப் படத்திற்கு மலர்மாலை
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் வருகை தந்தோர் அனைவராலும் மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
நிழற்படங்கள்
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின.

இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன. சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் நினைவேந்தல் நிகழ்வு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கிழக்கு ஆளுனர் செயலகத்துக்கு அருகாமையில் இன்று (24)இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்பு இதனை இணைந்து ஏற்பாடு செய்தனர். 2006.01.24 அன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயற்பட்ட ஊடகர்களுக்கான படுகொலைகளுக்கான நீதியை நிலை நாட்ட வேண்டும். உள்ளக பொறிமுறை அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாகவோ நீதியை வழங்க வேண்டும் எனவும் இதன் போது இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேலதிக தகவல்- ரொஷான்




கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri