மதுவரித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை - நால்வர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான வியாபாரம் மற்றும் உற்பத்தியைத் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது பெருமளவான கசிப்பு மற்றும் சட்டவிரோத சாராயம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையினை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் ஒன்றும் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட சில்லிக்கொடியாறு காட்டுப்பகுதியில் நேற்று கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கு கசிப்பு உற்பத்திக்காக நான்கு பரல்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 45ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இதேபோன்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன் தீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றும் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமும் முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து 1050 மில்லிமீற்றர் கசிப்பும், 3 கேஸ் சாராய போத்தல்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி அவுட்ஸ்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையில் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.