அம்பாறையில் போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை (Video)
அம்பாறை பிராந்தியத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனையானது இன்று (19) காலை முதல் மதியம் வரை கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணியாது சென்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பொலிஸாரினால் எச்சரிக்கை வடுக்கப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையானது கோவிட் அனர்த்தத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் இன்று அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் (Sujeet Priyantha) ஆலோசனையின் படி கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முக்கிய சந்திகள், பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 100 பேருக்கு மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










