சர்வதேசத்தை உலுக்கிய திடீர் வெள்ளப்பெருக்கு.. இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்
சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் 85 முதல் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எல்லைக்கு அருகில் பாயும் போட்கோஷி ஆற்றில் பனி உருகியதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு நீர் பாய்ந்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
85 முதல் 100 இலங்கையர்கள்
இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனி திடீரென உருகுவதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. இந்த வெள்ளப்பெருக்கினால் போட் கோஷி ஆற்றுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலும் நீரில் மூழ்கியதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசாங்கக் கட்டிடம் ஒன்றும் முற்றாக அழிந்துள்ளது.

நேபாள எல்லையிலுள்ள பனிப்பாறையிலிருந்து பனிக்கட்டிகளும் பாறைகளும் சரிந்து விழுந்து, போட் கோஷி ஆற்றின் கிளையாறான லெண்டே கோலா ஆற்றை அடைத்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கீழ்நோக்கி நீர் சீறிப் பாய்ந்தது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு உள்கட்டமைப்புகள், வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களை அழித்துள்ளது.
கூடுதலாக, பக்கத்திலுள்ள திபெத்தின் கிராங் மாகாணத்தில் கடுமையான சேறு சரிவுகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.