வவுனியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
வவுனியாவில் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவிற்கு தாமரை பூ பறிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியரின் உடலுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடேற் அதிகாரியான ஆசிரியர் 2ஆம் லெப்டினன் ப.பரந்தாமன் (வயது 33) நேற்று வவுனியா, வைரவபுளியங்குளம் குளத்தில் ஆலயத்திற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இறுதிக் கிரியைகள் ஆதிவிநாயகர் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்று உடல் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பிரதான நுழைவாயில் வரை எடுத்துச் செல்லப்பட்டு பாடசாலையின் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன், மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப பாடசாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது கடேற் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ஆசிரியரின் பூதவுடல் பிரதான வீதி வழியாக தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவானோர் திரண்டமையால் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிப் போக்குவரத்தும் அரை மணிநேரம் பாதிப்படைந்த நிலையில் போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
