மாணவர்களின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த பொலிஸார்
குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை மைதானத்தில் பணப்பையை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த 3 மாணவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
65ஆயிரம் ரூபாய் பணத்துடன் மைதானத்தில் பை தவறவிடப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்ற 3 மாணவர்கள் அதனை திறந்து பார்த்த போது பெருந்தொகை பணம் இருப்பதனை அவதானித்துள்ளனர்.
உடனடியாக குறித்த பையை மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பையை சோதனையிட்ட போது அது ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானதென அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நேர்மையான செயல்
உடனடியாக அவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி ஓய்வு பெற்ற அதிகாரியை வரவழைத்துள்ளனர்.
பையில் இருந்த தொகையில் ஒரு ரூபாயேனும் குறைவாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பிள்ளைகளை நேர்மையாக வளர்த்த பெற்றோரை தான் பாராட்ட வேண்டும். இந்த மாணவர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம் என ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேர்மையான செயலை செய்த மாணவர்களை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.




