சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள்!வடமராட்சி கடற்தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை(video)
வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என வடமராட்சி கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்றைய தினம்(25.03.2023) இடம்பெற்ற கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்தொழிலாளர்கள் சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டுவருவதாகவும், இதனால் இப் பிரதேசத்தில் உள்ள சிறு கடற்தொழிலாளிகள் தொழில் ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மீன்களை விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும் இதனால் உடனடியாக கடற்றொழில் திணைக்களம், மற்றும் கடற்படை, நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மீன்பிடி ஓய்வுக் காலம்
இதேவேளை வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோரால் கடற்படைக்கு ஒரு தொகை நிதி வழங்கப்படுவதாகவும் தற்போது இந்திய இழுவை மடி படகுகள் வருகை 50 வீதமாக குறைந்துள்ளதுடன் இந்தியாவின் மீன் பிடி ஓய்வுக் காலம் என்பதனால் இழுவை மடி படகுகளின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், குறித்த மீன் வளர்ச்சி ஓய்வுக்காலம் முடிந்த பின் இந்திய இழுவை படகுகள் வருகை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
வடமராட்சி வடக்கு, கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினரால் நியமன அடிப்படையில் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டமை ஒரு ஜனநாயக விரோதம் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது தொலைபேசியில் தொடர்புக்கொண்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா
கடற்தொழிலாளர்கள் போராட்டம், நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத தொழில்கள் நிறுத்தப்படும் என்றும்
தெரிவித்தமை குறிப்பிடதக்கது.