ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி வாழைச்சேனையில் போராட்டம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அணியினால் ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி சிறுவர்களைச் சிதைக்காதீர்கள் எனும் தொனிப் பொருளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள சுற்று வட்டத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அமைப்பினரால் ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதி சுற்று வட்டம் வரை சென்று எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்ஜித் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அணியினர் உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து ஹிஷாலினிக்கு நீதி வேண்டி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது காமக்கொடுரனை சட்டத்தின் இருந்து தப்பிக்க விடாதே, சட்டத்தினை வலிமைப்படுத்து, எமது நீதிக்கான பயணம் எப்போதும் ஓயாது, அறிக்கை அரசியல் வேண்டாம் சிறுமியின் அழுகுரலுக்கு நீதி வேண்டும், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, மக்கள் பிரதிநிதி சிறுமியைச் சீரழிப்பதா, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, விசாரணையைத் துரிதப்படுத்து, வீட்டுவேலை செய்வோரைப் பதிவு செய் போன்ற வாசகங்களைக் கையில் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்;.