ரணில் - சஜித் கட்சிகள் இணைவு! சாதகமான திசையில் பேச்சுவார்த்தை
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டில் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தற்போது பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்தப் பேச்சுகள் மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்கின்றன இதிலிருந்து சிறந்ததொரு முடிவை எதிர்பார்க்கின்றோம்.

கட்சியின் அடிமட்ட நிலைவரம் குறித்துக் குறிப்பிட்ட அவர்,
கிராம மட்டங்களில் பிளவுபட்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் தற்போது தாமாகவே ஒன்றிணைந்து வருகின்றனர் தலைவர்களும் அதேபோல் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாவுள்ளது.
பலமான பொது எதிரணி
எனவே, அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கைகோர்ப்பதற்கான சூழல் கனிந்துள்ளது.
நாம் இரு தரப்பும் இணைந்த பின்னர், ஏனைய ஒத்த கருத்துடைய தரப்புகளையும் உள்வாங்கி ஒரு பலமான பொது எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும் அதுவே தற்போதைய அரசியல் சூழலுக்கு அவசியமானது.
நீண்டகாலமாகப் பிரிந்திருக்கும் இவ்விரு பிரதான கட்சிகளும் மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.