இரண்டாவது நாளாக தொடரும் தமிழக கடற்றொழிலாளர்களின் போராட்டம்
இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை இலங்கை நீதிமன்றம் வெலிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இலங்கை அரசு
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள ஐந்து கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
கடற்றொழிலாளர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொலிஸார் பாதுகாப்பு
குறித்த போராட்டத்தில் சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கடற்றொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சி மடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



