மதுபோதையிலிருந்த பேருந்து நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபோதையிலிருந்த நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மதுபோதையிலிருந்த நடத்துனர்
முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் நடத்துனர் மதுபோதையில் காணப்படுவதாக, அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டுக்கு அமைவாகத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து வவுனியாவை வந்தடைந்ததும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால் குறித்த நடத்துனர் உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய அதிகாரிகளிடம் குறித்த நடத்துனர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பயணிகளின் உயிர்களுடன் விளையாடும் இவ்வாறான பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அதிகார சபையின் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அதிகார சபையின் தலைவர் குறித்த நடத்துனருக்கு எதிராக உடனடியாகச் சட்டரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பில் அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமாக அறியத்தருமாறு கோண்டாவிலில் உள்ள இ.போ.ச. பிரதம பிராந்திய முகாமையாளருக்கு எழுத்துமூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எந்தவித தயக்கமுமின்றி முறைப்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.