கடற்றொழில் சங்கங்களுக்குள் அரசியல் தலையீடுகள்.. தொடர்ந்து நிலவி வரும் அதிருப்தி
"சங்கங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் கடற்றொழிலாளர்கள் சமூகம் தாயில்லாத பிள்ளைகள் போல தவித்துக்கொண்டிருக்கின்றனர் " என யாழ்ப்பாணம் - வடமராட்சி, வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் புதிய தலைவர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தின் பாதுகாப்பு
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அரசியல் தலையீடுகளால் வீழ்ந்த சங்கங்கள் என்பது ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பலமாகும்.
வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வருங்காலச் சந்ததியினருக்கு கடலையும் சமுதாயத்தையும் பாதுகாப்பாகக் கையளிப்பதே ஒரு சங்கத்தின் உண்மையான நோக்கமாகும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அது முற்றிலும் எதிர்மாறாகவே இருக்கின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் துயர் துடைக்கும் ஒரு உன்னத நிலையில் இந்தச் சங்கங்கள் இயங்கி வந்தன.
எனினும், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல்களினாலும், தேவையற்ற அரசியல் தலையீடுகளினாலும் இந்தகக் கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சுயலாபங்களுக்காகச் சங்கங்கள் முடக்கப்பட்டு, மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டதால் சங்கங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
அரசியலைச் சங்கங்களுக்குள் நுழைத்து ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சீரழித்த வரலாறு கரையோர மக்கள் அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
சங்கம் இல்லாமல் மக்கள் இயங்க முடியாது இந்த அவல நிலையை மாற்றுவதே எமது புதிய நிர்வாகத்தின் முதல் இலக்காகும். சங்கங்களின் பங்களிப்பு இல்லாமல் மக்கள் தனித்து இயங்குவதையோ அல்லது அவர்கள் புறக்கணிக்கப்படுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்தல்
மக்களுக்காக இணங்கி வேலை செய்யக்கூடிய, மக்களின் குரலாக ஒலிக்கும் வலுவான சங்கங்களை உருவாக்குவதே எமது முதற்கட்ட வேலையாகும். சங்கம் எடுக்கும் முடிவுகளின் மூலமே மக்களின் உரிமைகளும் தேவைகளும் வென்றெடுக்கப்படும்.
சட்டவிரோத தொழில்களை ஒழிக்க மக்கள் சக்தியே போதும். அடுத்ததாக, எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் கடற்படை, காவல்துறை, இராணுவம் அல்லது அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மக்கள் சங்கம் நினைத்தால் மட்டுமே இத்தகைய சட்டவிரோதச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். ஒரு கிராமப் பகுதியில் பெரும்பான்மையான மக்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் போது, ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்று நடக்கும்.

உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் யாராவது சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டால், அந்த கிராமத்துச் சங்கத்தின் பொதுப் பெரும்பான்மை முடிவின் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அதையும் மீறிச் செயல்படுபவர்களைச் சங்கத்தின் மூலமாகவே சட்டத்தின் முன் நிறுத்த முடியும்.
அதைவிடுத்து, அரசாங்கத்தின் மீது குறை சொல்வதாலோ அல்லது அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுவதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை.
எனவே, அரசாங்கத்தையோ அரசியலையோ நம்பியிருக்காமல், எமது முதல் வேலையாகச் சங்கங்களோடு மக்களை முழுமையாக இணைத்து, மக்கள் சக்தியைக் கொண்டு எமது உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம் என வடமராட்சி - வடக்கு சமாசத்தின் புதிய தலைவர் பிரதீபன் உறுதியளித்துள்ளார்.