அம்பிகை அம்மையாரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பிலும் போராட்டம்
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் பெண் ஒருவர் தொடங்கியுள்ள உண்ணாவிரதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையிலான உண்ணாவிரதமாக இந்தப் போராட்டம் புதன்கிழமை 03.03.2021 மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல்வாதிகள், மதகுருமார் உள்ளிட்ட பலர் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் கடந்த 27ஆம் திகதி முதற்கொண்டு லண்டனில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
அவருக்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த 28ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம், நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.








