வடக்கு-கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலை துண்டிக்கப்படும்! மேர்வின் சில்வா பகிரங்க எச்சரிக்கை
வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.
இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை.இது எமது தாய்நாடு.அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.
வீதிக்கு இறங்குங்கள்
வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம். பிரபாகரன் ஆட்கொலை செய்தார். இந்த நாட்டின் இராணுவத்தினர், பொலிஸார் கொன்று குவித்தார். அவர்களின் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த பகை இன்றும் உள்ளது. இன்றும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.
ஜனாதிபதிக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குங்கள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.
உங்களின் தலையை எடுப்பேன்
இந்த கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன். உங்களின் தலையை எடுத்துக்கொண்டு தான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமாயின், ராஜபக்ச திருடர்களை பிடியுங்கள், இந்த நாட்டின் திருடர்கள், தரகு பெறுவோர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இடங்களில் 6 வீதமானவை, பசில் ராஜபக்ச என்ற தரகுதாரர், யாருக்கு கொடுத்தார். இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை. விவசாயம் அழிவடைந்துள்ளது, குடிநீர் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.
நுவரெலியாவில் மகிந்த ராஜபக்ச, கிரிக்கெட் விளையாடுகின்றார். ராஜபக்ச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் நேரமா இது? 13ஐ வழங்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் அதனை வேண்டாம் என்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். நாம் ஜனாதிபதி தேர்தல் முறையை மாற்றி அமைப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாக்குறுதி எடுங்கள்.”என கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அரசியல்வாதி
மேர்வின் சில்வாவின் இந்த உரையானது, இனங்களுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே மேர்வின் சில்வா வலம் வருகின்றார்.
ராஜபக்சர்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்காத நிலையில், அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |