வட மாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை
வட மாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்குமான இழப்பீடுகள் வழங்குவதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (19.5.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த ஊடக வாயிலாக சில விடயங்களை வெளிக்கொண்டு வர விரும்புகின்றோம்.
இழப்பீடுகள்
குறிப்பாக டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் அல்லது சேதமாக்கப்பட்ட படகுகள், அதேபோன்று காணாமலாக்கப்பட்ட வலைகள் தொடர்பாக நாங்கள் அண்மையிலே கடற்றொழில் அமைச்சர் அவர்களைச் சந்தித்த போது அவரிடம் பல விடயங்களை நாங்கள் முன்வைத்தோம்.

சில தீர்வுகள் எட்டக்கூடிய வாறும், அதேபோன்று எதிர்காலத்திலே அமைச்சின் ஊடாகச் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள், அதேபோன்று கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகளும், அதேபோன்று எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்த போது பல்வேறுபட்ட விடயங்களை நாங்கள் பேசியிருந்தோம்.
நடவடிக்கை
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு படகு, வலைகள் சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தபோது, அண்மையிலே அதற்கான படகுகளும் வலைத்தொகுதிகளும் அந்தந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மன்னாருக்கான படகுகளும், அதேபோன்று வலை தொகுதிகள் 26ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கை மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் எடுத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.