உலகளவில் வெடிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வெளியான அறிக்கை
நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் முன்னெடுப்பில் உலக அரங்கில் நடைபெறும் கொடிய யுத்த வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவும் அதில் கொல்லப்பட்டவர்களுக்கான சர்வ மத பிரார்த்தணையும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றைய தினம்(08.05.2026) முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுதாவது,
மனிதாபிமானத்திற்கான கூட்டு அறைகூவல் - யுத்தத்தின் நிழலில் மனித மாண்பும் நாடுகளின் வாழ்வாதாரமும் “அமைதியே புனிதமானது” உலகளாவிய வன்முறைகளுக்கு எதிராகவும், பொருளாதார நீதிக்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் பங்கெடுத்த மதத் தலைவர்களின் அறிக்கை தற்போது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ஏக துருவ பேரரசுக் கட்டமைப்பை தக்க வைப்பதற்கான யுத்தம் பல் துருவ பூகோள ழுங்குக்கு எதிராக அந்த நாடுகளின் நிலப்பரப்பு எல்லையைத் தாண்டி ஏனைய நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதை அனைவரும் நினைவுகூர தொடங்கிவிட்டனர்.
ஆட்சி மாற்றத்திற்கான யுத்தமாக அறிவிக்கப்பட்டு தற்போது பல் துருவ உலக ஒழுங்கிற்கான போட்டியாக மாறியுள்ளது.
இவ் வல்லாதிக்கப் போட்டியில் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள். இவை எல்லாமே உலகை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி தள்ளியுள்ளது.
உலகில் நிலவும் பொருளாதார சிக்கல்கள்
இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுவது மத, இன, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் சாதாரண மக்களே அழிவுக்குள்ளாகப் போகின்றனர்.

குறிப்பாக ஆசிய, தெற்காசிய நாடுகளை வெகுவாகப் பாதிக்கப் போகின்றது. போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூரும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட நபர்களையும், குடும்பங்களையும் நினையில் கொண்டு இந்த அறைகூவலை விடுக்கின்றோம்.
இலங்கையின் குறிப்பாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களாகிய நாம் எமது கூட்டுப் பிரார்த்தனைகளையும் ஆழ்ந்த இரங்கலையும் முதற்கண் சமர்ப்பிக்கின்றோம்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ம் லியோ அவர்கள் அண்மையில் தனது திருத்தூதுப் பயணங்களின் போது வெளியிட்ட காத்திரமான கருத்துக்களை நாம் இவ்வேளையில் வழிமொழிகிறோம். யுத்தம் என்பது எப்போதும் ஒரு தோல்வியே எனக் குறிப்பிட்ட அவர் “உலகம் ஒரு சில அடக்குமுறையாளர்களால் சீரழிக்கப்படுறது" என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.
ஆயுதங்களுக்காகப் பில்லியன் கணக்கான நிதியைச் செலவிடுவது மனிதாபிமானத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என அவர் சுட்டிக்காட்டியதை நாம் இன்று இலங்கையின் வட பகுதியில் இருந்து உரக்கச் சொல்கிறோம். அமைதி என்பது வெறும் போர் இல்லாத நிலை மட்டுமல்ல அது மனித இதயங்களில் இருந்து தொடங்கும் ஒரு புனிதமான பயணம் என்பதை அவர் தனது அண்மைய உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அகிம்சை வழிப்போராட்டம்
திருத்தந்தையின் இந்த உயரிய மனிதநேயச் சிந்தனையோடு இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறிகளும் வலுசேர்ப்பதை இங்கு கோடிட்டு காட்ட விரும்புகின்றோம்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்று ஆசிக்கும் இந்து மதமானது “அகிம்சை பரமோ தர்ம" வன்முறையற்ற தன்மையே மேலான அறம் என்பதற்கிணங்க அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் மதிக்கும் உயரிய மனிதாபிமானத்தையும் இறைவனின் திருவருளை பெறும் வழிகளில் ஒன்று எல்லா உயிர்க்கும் அன்பாயிருத்தல் என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்.
இஸ்லாமிய நெறி சொல்வதைப்போல் ஒரு மனிதனை அநியாயமாக மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு சமன் என்ற போதனைக்கேற்ப அமைதியும் சமாதானமும் மட்டுமே மனித குலத்தைக் காக்கும் என நாம் பறைசாற்றுகிறோம்.

2 மூன்றாம் நிலை நாடுகளின் மீதான பொருளாதாரத் தாக்குதல்.
வல்லரசுகளின் இந்த வன்முறைகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளைப்பொருளாதார ரீதியாகச் சிதைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பொருளாதார நெருக்கடி போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண உழைக்கும் மக்களின் தட்டில் இருக்கும் உணவைப் பறிக்கிறது.
திருத்தந்தை அவர்கள் தனது 2026 ஆம் ஆண்டிற்கான உலக அமைதி தினச் செய்தியில் குறிப்பிட்டது போல வன்முறை என்பது மனித மாண்பை (Human Dignity) இழிவுபடுத்துவதாகும்.
போரினால் ஏற்படும் வறுமை, பசி மற்றும் இடப்பெயர்வு என்பன மனிதனை அடிமைப்படுத்துகின்றன. சமூக நீதி - மண்ணுலகில் அமைதி நிலவ வேண்டுமாயின் நாடுகள் ஆயுதங்களுக்குச் செலவிடும் தொகையை வறுமை ஒழிப்புக்கும் மனிதாபிமானத் தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
மதத் தலைவர்களின் கூட்டுத் தீர்மானம் மதங்கள் போர் புரிவதற்காக அல்ல மாறாக மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன.
இதன்படி,
1. மனிதநேயமே உயர்வு - எமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் மனித உயிரின் மேன்மை மற்றும் மாண்பைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம்.
2. பேச்சுவார்த்தையே தீர்வு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே நிலையான அமைதியைக் கட்டியெழுப்ப முடியும்.
3. நல்லிணக்கத்தின் தேவை நாம் கொண்டுள்ள இந்த மத ஒற்றுமை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையட்டும். இறுதியாக, "யுத்தம் புனிதமானது அல்ல. அமைதியே புனிதமானது." (Peace is holy, not war) என்ற திருத்தந்தையின் போதனைக்கிணங்க அகிலமெங்கும் சாந்தி நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், இறைவனை வேண்டுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
