நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்- சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
தடுப்புக் காவல் மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைச் செயல்களையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், நீதித்துறை அமைப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் பாழாக்கும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான கரிசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

கடந்த ஜூலை 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதலில் வெடித்த இந்த கொடூர வன்முறையில், 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் என இருதரப்பினரின் உயிருக்கும் இத்தகைய சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் நிலவி வருவதையும், சட்டரீதியான கண்காணிப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறைக்குள் இருக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளை கண்ணியத்துடனும் சட்டப்பூர்வமாகவும் பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளது. தவறு செய்ததாக நிரூபிக்கப்படும் கைதிகள், சிறை அதிகாரிகள் அல்லது இதர உயர் அதிகாரிகள் என எந்தவொரு தரப்பாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ உதவிகளும், நஷ்டஈடு உள்ளிட்ட இதர ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுயாதீன குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
எனினும், இந்த விசாரணையானது முற்றிலும் சுயாதீனமானதாகவும், நடுநிலையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், மிக விரைவாகவும் நடத்தப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏனெனில், இந்த விசாரணை முறையின் நம்பகத்தன்மையைப் பொறுத்தே நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தங்கியுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri