மாகாண சபை தேர்தல் கால தாமதம்.. தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்
விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், "இந்த சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.
கால அவகாசம்
இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு திணைக்களம் தயாராக இருக்கின்றது.
அல்லது குறித்த தீமானத்தை தற்போது நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பளைய முறைமையை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, "சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் இரு உறுப்பினர்களது இருப்பிட உறுதி விடயம் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.
ஆனாலும், அந்த தீர்ப்பின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஒருவரது தனிப்பட்ட விடயம் தொடர்பில் வேட்புமனு நிராகரிக்கப்படாது.
ஆனாலும் குறித்த வழக்கின் தீர்ப்பு பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பானதாக இருப்பதால் வேட்புமனுவில் கோரியபடி பெண் பிரதிநிதித்துவம் இல்லாதுவிடின் அது குறித்து நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். எனவே நீதிமன்றின் தீர்ப்பு கிடைத்தால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



