நாடு முக்கியமா? சாப்பாடு முக்கியமா? சபையில் எழுந்த கடும் வாய்த்தர்க்கம்
நாடு முக்கியமா, சாப்பாடு முக்கியமா என்று சபையில் அரச - எதிரணிக்கிடையில் எழுந்த சர்ச்சையில் சாப்பாடுதான் முக்கியம் என்ற அரச தரப்பின் கருத்தே வெற்றி பெற்றது.
நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10 மணிக்குக் கூடிய நிலையில் முற்பகல் 11 மணி வரையும் வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 11 மணிக்கு பெற்றோலிய வளங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தது.
ஆனால், வெள்ளைப்பூண்டு, லிற்றோ காஸ் தொடர்பில் அரச - எதிர்க்கட்சியினரிடையில் நீண்ட நேரமாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால், முக்கியமான விவாதம் இருக்கின்றது எனவும், அமைச்சர் நேரத்தை வீணடிக்கின்றார் எனவும் கூறி இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், அரசு தரப்பினர் அமைச்சருக்கு விளக்கமளிக்கும் உரிமை உள்ளது என வாதிட்டு அமைச்சரை விளக்கமளிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரைக் கோரினர் அப்படியானால் அமைச்சர் நீண்ட நேரம் விளக்கமளிப்பதனால் பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரையிலான உணவுக்கான நேரத்தையும் விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரினர்.
ஆனால், அவ்வாறான கோரிக்கை அரச தரப்பிடமிருந்தே விடுக்கப்பட்ட வேண்டுமென சபாநாயகர் கூறினார். ஆனால், உணவுக்கான நேரத்தை விவாதத்துக்கு எடுக்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தாம் உணவருந்த நேரம் வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த எதிர்க்கட்சி எம்.பி. நளின் பண்டார, "நாம் நாடு முக்கியம் என்கின்றோம். அமைச்சர் சாப்பாடு முக்கியம் என்கிறார். நாடா, சாப்பாடா முக்கியம் என்பதனை சபாநாயகரின் முடிவில் பார்ப்போம்" என்றார்.
இந்நிலையில், முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய பெற்றோலிய வளங்கள் தொடர்பான விவாதம் 12.15 மணியளவிலேயே ஆரம்பமானது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான உதய கம்மன் பில உரையாற்றிக்கொண்டிருந்த போது 12.30 மணிக்கு உணவு நேரத்துக்காக சபை நடவடிக்கை 1.30 ணி வரை ஒத்திவைக்கப்படுகின்றது எனச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்து சபையை உணவுக்காக ஒத்திவைத்தார்.
ஆக நாடா, சாப்பாடா முக்கியம் என்ற எதிர்க்கட்சியின் கேள்விக்கு சாப்பாடு தான் முக்கியம் என்ற பதிலே சபை ஒத்திவைப்பின் மூலம் கிடைத்தது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri