அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக் கொண்ட அரச வீடுகள் : அம்பலப்படுத்திய சாமர சம்பத் எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தின உள்ளிட்ட 07 பிரதியமைச்சர்கள், அரச வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய(17.11.2025) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் உட்பட 07 பிரதியமைச்சர்ககள்
தொடர்ந்து பேசிய அமைச்சர், சபாநாயகர் உட்பட 07 பிரதியமைச்சர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் வீட்டின் வாடகையை பெற்றுக் கொள்ளும் படிமுறையில் வீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க எம்.பி,
இந்த வீடுகள் முன்னரும் வாடகை அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டது. தயாசிறி ஜயசேகர எம்.பியும் வாடகை வழங்கியே தங்கியிருந்தார். ஆதலால் இன்றும் அவர்களுக்கும் கொடுக்கலாம்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்த வீடுகளை பெற்றுக் கொள்ள வழிசமைக்கவும். தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் அரச வீட்டு வசதிகளை பெற்றுக் கொள்ளவதில்லை என வாய்கிழிய பேசியவர்கள். இன்று அந்த வாக்குறுதிகளை மீறியுள்ளனர்.
இந்த வீடுகள் 13 மாதங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீடுகள் இடிந்து விழும் நிலைக்கு உள்ளாகக் கூடும். இது தொடர்பில் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கவும்” என கோரிக்கை விடுத்தார்.