திருகோணமலை நோக்கி நகரும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)
இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி இன்றைய தினம் (16) திருகோணமலையை வந்தடைந்தது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த பேரணி திருகோணமலை சிவன் கோவில் ஆலயத்தை இன்று பிற்பகல் வந்தடைந்தது.
இவ்வாறு வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்றுவட்டத்துக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்ட ஆறு பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அருட்பணி கந்தையா ஜெகதாஸ், 13 வருடங்களுக்குப் பின்னர் அரசினால் போரினால் மரணித்தவர்களை நினைவு கூற அவர்களுக்கு உரிமை உண்டு அதனை தடுக்க மாட்டோம் என அறிவித்த போதிலும் அரசு புலனாய்வுத் துறையினரின் கெடுபிடிக்கு மத்தியிலேயே இந்த நினைவுநாளை அனுஷ்டிக்க வேண்டியுள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் திருகோணமலை நகரை வந்திருந்த குறித்த மக்கள் பேரணியை சுற்றி ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் புலனாய்வுத்துறையினர் புகைப்படம் எடுத்த வண்ணம் உள்ளார்கள். தற்போது சுமுகமான சூழ்நிலையில் புகைப்படங்களை எடுத்து பின்னர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு எம்மவர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறித்த மக்கள் பேரணியானது பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று,களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பின் ஊடாக வாகரை,மூதூர் பிரதேசத்திலிருந்து இன்றைய தினம் திருகோணமலை நகரை வந்தடைந்தது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமானது.
இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியை பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியானது நேற்று மாலை மட்டக்களப்பினை வந்தடைந்த அதேநேரம் இன்று காலை திருகோணமலை நோக்கி நடைபேரணி ஆரம்பமானது.
கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் உப்பற்ற கஞ்சி வழங்கப்பட்டு கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரணியானது திருகோணமலை நோக்கி பயணமானது.
வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பேரணியானது மட்டக்களப்பு நகரை வந்தடைந்து நகர் ஊடாக திருகோணமலை வீதியைச் சென்றடைந்து திருகோணமலை நோக்கி பேரணி சென்றது.
இப்பேரணி நாளை திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு சென்று பின் நாளை மறுதினம் முள்ளிவாய்க்காலை அடைந்து அங்கு இனஅழிப்பு வார நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.