முள்ளிவாய்க்காலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது மௌனமாக இருந்த பேராயர் மல்கம்
யுத்தத்தின் போது நான்கு இலட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் முடங்கியிருந்த போது 75 ஆயிரம் பேருக்கு மாத்திரம் இலங்கை அரசால் உணவு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மிகுதிப்பேர் உணவுக்காக கொள்ளப்பட்டார்கள். கஞ்சிக்காகவும், சோற்றுக்காகவும் வரிசையில் நின்ற பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.
அதனை விட ஐக்கிய நாடுகள் அமைப்பினுடைய அங்கத்துவ நிறுவனங்கள் இந்த மண்ணிலே இருக்க விடாமல் வெளியிலே இலங்கை அரசால் கலைக்கப்பட்டார்கள்.
அப்பொழுதெல்லாம் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எந்த வார்தைகளையும் பேசவில்லை. அதிலே இறந்த மக்களுக்காக ஒருநாள் கூட அஞ்சலி செலுத்துமாறு அவர் யாரையும் கேட்கவில்லை.
அவரை நான் பணிவாக கேட்கிறேன் இந்த உயர்ந்த சபையின் ஊடாக ஈஸ்டர் தாக்குதலிலே இறந்து போன மக்கள் மட்டுமல்ல, போரின் போது இறந்து போன தமது வாழ்வுக்காக ஏங்கிய சிறார்களுக்காகவும் ஒருமுறை உங்கள் குரல்களை இந்த நாட்டிலே உயர்த்துங்கள்.
இயேசு பிரானின் தூதுவராக இயேசுபிரானின் கொள்கைகளை மையமாக வைத்த மனிதராக மதத் தலைவராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் என மிகப் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.