கிளீன் ஸ்ரீ லங்கா கசிப்பை கிளீன் செய்யுமா! சிறிநேசன் கேள்வி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் கசிப்பை இல்லாதொழிக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்றையதினம்(15.02.2025) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும்,
ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்காத்திட்டம் கசிப்பைக் கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுகின்றது.
உணர்வு பூர்வமான ஒத்துழைப்பு
பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார், கலால் உத்தியோகத்தர்கள், மதுக்கட்டுப்பாட்டு உத்யோகத்தர்கள், படையினர் கூட்டாக உணர்வு பூர்வமாக ஒத்தழைத்தால், கசிப்பை இல்லாது ஒழிக்க முடியும்.
கிராமங்களில் வறுமை, போசாக்கு இன்மை, குடும்ப வன்முறைகள், நஞ்சூட்டல், மரணம், நோய், மாணவ இடை விலகல், பண்பாட்டு சீர்குலைவு போன்ற அனைத்திற்கும் கசிப்பு, போதை வஸ்துப் பாவனை போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
எனவே, இவற்றை ஒழிப்பதற்கு கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் உச்சளவில் பயன்பட வேண்டும். போதைப்பொருட்களை ஒழிக்காமல் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தினால் முன்னேற்றம் காண முடியாது.
கசிப்பு கோரத்தாண்டவம்
மட்டக்களப்பில் படுவான்கரைப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை மிக அதிகரித்துள்ளது. யுத்தக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசமாக படுவான்கரை இருந்தபோது கசிப்பின் மணம் கூட அங்கு இருக்கவில்லை என்பது மக்களின் கருத்தாகும்.
யுத்தம் முடிந்த பின்னர் படுவான்கரையில் கசிப்பு கோரத்தாண்டவம் ஆடுகின்றது. பொலிஸார் இந்த விடயத்தில் என்ன செய்கின்றார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
எது எப்படியாக இருந்தாலும், தேசியமக்கள் சக்தியின் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் வெற்றி பெற்றால் கசிப்பின் தாண்டவத்தை ஒழிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
