ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! குடிவரவு நிறுவனத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறந்த இலங்கைப் பெண்ணின் சகோதரிகள், தனது உடன் பிறந்தவரின் மரணத்திற்கு பொறுப்பேற்குமாறு குடிவரவு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்புக்காவலில் மரணமான, 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலியின் குடும்ப உறுப்பினர்கள், விஷமா உயிருடன் இருந்த கடைசி இரண்டு வார பாதுகாப்பு கமராக்காட்சிகளை வெளியிட வேண்டும் மற்றும் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தாம் தற்காலிகமாக நாட்டுக்கு திரும்புவதாகவும், எனினும் தமது கோரிக்கையை கைவிடப்போவதில்லை என்றும், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள விஷ்மாவின் இளைய சகோதரி வயோமி, ஜப்பான் குடிவரவு அதிகாரிகள் தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஏனைய வெளிநாட்டினருக்கு இதே நிலை மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மத்திய ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் தனது சகோதரி எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதைக் காட்டும் காட்சிகளின் இரண்டு மணிநேர திருத்தப்பட்ட காணொளி பதிப்பின் ஒரு பகுதியை பார்த்த பிறகே, தாம், ஜப்பானை விட்டு வெளியேற முடிவு செய்ததாக வயோமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விஷ்மாவின் இளைய சகோதரி பூர்ணிமா, ஜப்பானில் தங்கியிருப்பார். அத்துடன் காணொளிகளின் ஏனைய காட்சிகளை முழுமையாக வெளியிடுமாறு தொடர்ந்து அவர் ஜப்பான் அதிகாரிகளை வலியுறுத்துவார் என்றும் வயோமி குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் குடிவரவு சேவைகள் நிறுவனம் முதலில் பாதுகாப்பை காரணம் காட்டி குடும்பத்திற்கு காட்சிகளை வெளியிட மறுத்துவிட்டது, ஆனால் பொது விமர்சனத்தை தொடர்ந்து, காணொளிக் காட்சிகளின் சுருக்கமான பதிப்பை பார்க்க அனுமதித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட விஷ்மாவின் மரணம் குறித்த நிறுவனத்தின் இறுதி அறிக்கையின்படி, குடிவரவு அதிகாரி ஒருவர் ஒரு பானத்தை விழுங்க முடியவில்லை என்று விஷ்மாவை கேலி செய்ததாகக் கூறப்பட்டது, 2020, ஆகஸ்ட் இல் விசா காலத்துக்கு அதிகமான காலம் தங்கியதற்காக நாகோயா தடுப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2021, ஜனவரி நடுப்பகுதியில் இருந்து வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளைப் பற்றி முறையிட்டுள்ளார். சிகிச்சைக்காக தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பித்தார், ஆனால், அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது.
விஷ்மாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களால் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இணையம் மூலமான மனுவில், விஷ்மாவின் இறுதி நாட்களின் முழு காணொளிக் காட்சிகளையும் வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 80,000 கையெழுத்துக்கள் பெறபட்டுள்ளன.