இந்தியாவிற்காகவும் புலம்பெயர் தமிழர்களுக்காகவும் அமைந்த உரை!!
2007 நவம்பர் 27 மாலை 5.25 மணி முழங்காவில் துயிலும் இல்லத்தின் வெண்மணற் பரப்பில் கால்களை பதைத்தபடி எதையோ எதிர்பார்த்துகாத்திருந்தேன். வரிசை வரிசையாக நீழும் விதைக்கப்பட்ட புனிதங்கள் அமைதியாய்படுத்திருந்தன. ஒவ்வொரு புனிதங்களுக்கு முன்னாலும் அளவுகளில் சாதனைபடைக்கும் மாலைகளும், வர்ணப்பூக்களும், உணவுப்பண்டங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அதனையும், ஏற்றப்படாத தீபத்தட்டையும் காத்தபடி உறவினர்கள் நின்றனர்.
தமது பிள்ளைகளை, தமது சகோதரர்களை நினைந்து உருகாத உறவினர்களைக்காணவே முடியவில்லை. மூக்கிழுக்கும் சத்தங்கள் மட்டுமே புனிதவெளியின் அமைதியை சீரழித்தன. இவை எதுவுமே அற்ற அநாதைப் புனிதங்களும் சில பூக்களையும், ஏற்றப்படாத தீபத்தட்டையும் வைத்துக்கொண்டு மனிதர்களுக்காக காத்திருந்தன.
அந்தப்புனிதங்களின் அம்மா, அப்பா, சகோதரர்கள் மட்டக்களப்பிலோ அல்லது அம்பாறையிலோ அல்லது அண்டவெளியிலோ பெரும்பாலும் இருப்பர். 1999 ஆம் ஆண்டிலிருந்து இத்தூயநாளில் உறவுகள் வருகைதராத புனிதங்களுக்கு தீபம்ஏற்றுவதையே வழக்கமாகக்கொண்டிருந்தேன்.
1999, 2000- புதுக்குடியிருப்பு சுப்பிரமணியம் வித்தியாசாலை பொதுத்துயிலுமில்லம், 2001- முள்ளியவளை, 2002- தேராவில், 2003- மணலாறு, 2004 – கோடாலுக்கல்லு, 2005- கோப்பாய், 2006- வன்னிவிளாங்குளம் இவ்வாறு நான் தீபமேற்றியபட்டியல் இன்றும் நினைவிருக்கின்றது. 2007- முழங்காவில், மேஜர்நிலா, அம்பாறை என அடையாளப்படுத்தப்பட்ட புனிதமொன்றின் முன்னால் நான் கொண்டுசென்ற என் உயரமாலையை அணிவித்து விட்டு நின்றேன்.
மாலை 5.30க்கு உலகமே எதிர்பார்த்திருக்கும் அவரி உரை தொடங்கியது. சனங்களெல்லாம் காதுகளை ஒலி வாங்கிக்குள்ளும், கண்களைப், பெரிதாகக்கட்டப்பட்டிருந்த திரைச்சீலைகளுக்குள்ளும் புகுத்திக் கவனித்திருந்தனர். அந்த உரையில் வீராவேசம்கொப்பளித்தது.
வழமைபோல 6 மணிக்கு தன்னுரையை நிறைவுசெய்துகொண்டார். 6.05க்கு ஆலய மணிகள் பிரமாண்டமாய் ஒலிக்கும் என்ற நியதிஅங்கிருந்தவர்களை திட்டமின்றி செயற்படவைத்தது. பொதுவான புனிதத் தீபத்திற்குயாரோ ஒரு 'பெரியவர்' உயிர்கொடுத்ததைத் தொடர்ந்து தயாராய் நின்றவர்கள் அனைவரும் தத்தம்பிள்ளைகளின், சகோதரர்களின் தீபங்களை ஏற்றினர்.
நானும் மேஜர் நிலாவின் தீபத்துக்கு ஒளியேற்றினேன். சொர்க்கம் மிஞ்சிய அழகுத்தேசமாக அந்நேரத்தில் அதுமிளிர்ந்தது. அழுகுரல்கள் தீபத்தின் சுவாலையை மீறிஎழுந்தன. தீபம் ஏற்றியபின் விதையானவர்களை அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுவதற்காக விடப்படும் இரு நிமிட அமைதிப்பொழுதைக்கூட அது கிழித்தது. தீபங்களளும், அழுகையும், நினைவும் பிரகாசமாய் எரிவதைக்கண்டேன்.
'.......ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.....' ஓங்கிஒலித்த இந்த உணர்ச்சிக்கோஷம் இரும்பு மனங்களையும் கூடஉடைத்தது. 6.35க்கு வழமைபோல நிமிர்வுபெற்ற மனதோடு முழங்காவிலில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். இந்தநேரத்தில் கட்டுப்பாட்டுத் தமிழ்பகுதிகள் அனைத்தும் வீட்டுவாசல், படலையடி, பாடசாலை, கோயில்போன்ற இடங்களில் புனிதவாசணையை பூசிக்கொள்ளும்.
சிவப்பு, மஞ்சள்கொடிகள் மற்றும் மங்களகரமான அலங்காரங்கள் சூழலை அழகுபடுத்தும். அத்தேசமே அந்நாளில் மாலை 6.05க்குப் பின்னர் சுட்டிவிளக்குகளின் உயிர்ப்பில் நனையும். இதுசமய, சாதிவேறுபாடற்ற ஒரு புனிதநாள். வீரியம் பெருகும்நாள். அந்நாள் பற்றிய படிமம் இப்படித்தான் எங்கள் மனங்களில் படிந்திருந்தது. 2008.07.12 காலை 5.21 மணி புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று முல்லைத்தீவு பரந்தன் வழியாக வவுனியாவிற்குப் பயணிக்கிறது. அதற்குள் ஓர் இரும்பு இருக்கையை நிரப்பியபடி நான். அத்தெருவில் என் கடைசிப்பயணம் அது என்று நான் நினைக்கவேயில்லை.
சுற்றிவளைக்கப்பட்டிருந்த யுத்தம் அங்கிருந்த எழுச்சிமிக்க மனிதர்களை எதிர்பார்த்திருந்தது. அதற்காக எதிர்ப்படும் அனைத்து இடங்களிலும் வீரம்பேசியது. அந்தப் பேருந்தினுள்ளும் ஒரு குத்தாட்டம்போட்டது. '.....வெள்ளடியன் சாவலும் விடியும்போது கூவுது வீட்டுக்குள்ள நீயிருந்து என்ன தயக்கம்....' வீரத்தேவாராம் உருவேற்றிக்கொண்டிருந்தது. திடீரென பாடல் நிறுத்தப்பட்டது. ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.
தேராவில் மாவீரர்துயிலுமில்லம். எல்லாத்தலைகளும் துயிலும் இல்லத்தை எட்டிப்பார்த்தன. பார்க்கப்பார்க்க அளுத்துப்போகாத இடமல்லவாஅது. விடிபொழுதில் நிராதரவாய்படுத்திருந்தது. சடலங்களின் வரவுக்காக புதுக்குழிகள் வாய்திறந்தபடி காத்திருந்தன. அழகாய் நிமிர்ந்த வாசலோடு கொஞ்ச செருப்புகள் ஒழிந்திருந்தன. காலணிகளோடு உட்பிரவேசிப்பதை யாருமே விரும்பவில்லை.
தமக்குத்தாமே சில கட்டளைகளை இட்டு வைத்திருந்தனர். நம் தெய்வங்களின் கோயில் போல அதுவும் புனிதப்பட்டஇடம். தேராவில் துயிலுமில்லம் கடைசியாய் என்னைக்கடந்து விட்டது. அதனைக் கடக்கும் வரைக்கும் வாகனங்கள் மெதுவாகசெல்லவேண்டும். ஒலிஎழுப்பத்தடை. பாடல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆரவாரங்கள் அமைதிக்குள் உறைந்துவிடும். இவைகள் அங்கு வாழும் மூன்று வயதுக்குழந்தைக்கும் தெரிந்திருந்த சட்டமற்ற நடைமுறை. விமர்சனமின்றியாவரும் ஏற்றுக்கொண்டனர்.
2008 நவம்பர் 27 மாலை 5.30 பல்கலைக்கழக விடுதி மாடியொன்றின் மொட்டைத்தளம். பிளாஸ்ரிக் ரயர்கள் மாலை 5.30க்கு கொழுத்தப்படுவதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்றன. கீழ் உள்ள சில அறைகளின் மறைவான இடங்களில் மெழுகுவர்த்திகளும், எண்ணுமளவிலான பூக்களும் பீதியின் மத்தியில் பீடமேறியிருக்கின்றன. அந்த மாடியைச் சுற்றிய மதில் வேலிகளுடன் இராணுவம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 40 வரையிலானவர்கள், தங்கள் தலைகள் மேலே தெரியாதபடி, அவரின் உரைக்காககைத் தொலைபேசி வானொலி சேவையுடன் கட்டுண்டு இருக்கின்றனர். அலைவரிசை இரைச்சலோடு 5.30க்கு தன் இறுதி உரையை ஆரம்பித்தார். அவரின் பேச்சு புலம்பெயர் தமிழர்களுக்காகவும், பிணங்களைத்தின்னும் இந்தியாவுக்காகவும், சர்வதேசத்துக்காகவும் ஆற்றப்பட்டதாகவே இருந்தது.
இம்முறை துயிலுமில்லங்கள் சுருங்கிக்கொண்டன. பயம் - குரூரம் இவைகளுக்கு நடுவில் முள்ளியவளை, தேராவில் துயிலும் இல்லங்களில் மட்டும்தான் தீபங்கள் உயிர்பெற்றன. வீதியில் ரயர் கரிய புகையுடன் இறுதியாய் எரிந்து சாம்பலாகியது. கீழேமெழுகுவர்த்திகள் கொழுத்தப்பட்டன. அறைக்கதவுகளைப் பூட்டிக்கொண்டு ஒளிந்துகொண்டோம். 2009 நவம்பர் 27 நேரமில்லை புனித இடங்கள் மறையத்தொடங்கின. ஒவ்வொரு துயிலுமில்லங்களையும் பலமாகப்பலப்படுத்தியிருந்தார்கள். அவரின் உரைக்காக பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஏமாற்றத்தின் எரிச்சல் இருந்த நம்பிக்கையை எரித்தது. எங்குமே தீபங்கள் ஏற்றப்படவில்லை. அதைப்பற்றியபேச்சுக்களும், நினைவுகளும் குறைந்தன. பலர் மறந்தேபோனார்கள். ஆனாலும் நம்தேசத்திலுள்ள சில கிராமங்களில் உயிர் பறிக்கும் எச்சரிக்கைகளையும் மீறி மனிதக்கை மறைப்புக்களின் மத்தியில் 6.05க்கு தீபம்ஏற்றப்பட்டதாம்.
2009க்குப் பின்னர் கனதி மிகு இந்நாட்களை வெளியாரும் உள்ளாருமாகப் பல குழப்பங்கள். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள். மிரட்டல்கள். நீதிமன்றதடையுத்தரவுகள். ஆனாலும் உள்ளே கனன்றுகொண்டிருக்கும் அந்தப்பெருந்தீயைக் எவராலும் கட்டுப்படுத்த இயலவில்லை. ஏனெனில் எமக்காய்தியாகித்தவர்கள் எங்கள் ஆன்மாக்களோடு கலந்துவிட்டனர். எமைக்காக்கும் இறையாகிவிட்டனர். இந்த இறைகள் தூணிலும், துரும்பிலும் நின்றொளிர்கின்றனர். அவர்கள் பற்றிய எல்லாவற்றையும் அழித்துவெளியாக்கினாலும், அவ்வெளியில் நின்று பிரகாசிக்கின்றது அவர்தம் நினைவு.
- ஆரூரன் -