அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் - இலங்கை கூறியுள்ள விடயம்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒன்றாகும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற, நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட குறித்த தீர்மானத்தினை எதிர்ப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன் மற்றும் கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து பிரதிநிதி டெபோரா கே. ரோஸினால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட H.RES.413 தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் 2021 மே 18ஆம் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற, நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக, அமெரிக்கக் காங்கிரசில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தென்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயக பூமி தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்தில், இலங்கையில் போர் நிறைவடைந்து 12 வருடங்களை அங்கீகரித்தல், உயிரிழந்த உயிர்களை கௌரவித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும், நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காக இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு மற்றும் சீர்திருத்தத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் போன்ற விடயங்களை குறித்த தீர்மானம் உள்ளடக்கியுள்ளது.
முலும், இலங்கை தனது சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாத நிலையில், கடுமையான குற்றங்களை விசாரணை செய்ய நீதி பொறிமுறையை நிறுவவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான பாரம்பரிய தமிழர் தாயகம் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாய் என்ற வகையில் காணப்படுவதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆயுத மோதலின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு, சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை, இலங்கையின் வடக்கு மாகாண சபை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.