ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் பொது மக்கள் அத்துமீறி நுழைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபர்கள் 7 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னதாக, சந்தேகநபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.