மகிந்தவிற்கு அன்று இருந்த அதே பயம் இன்று கோட்டாபயவிற்கு! வெளிவரும் சிக்கலின் பின்னணிகள்
1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சிக்கு வருவதற்கான கோட்பாட்டை உருவாக்கியவர் ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன். அவரது ராவய பத்திரிகை சிறிய பத்திரிகையாக இருந்தாலும் அந்த பத்திரிகையே இலங்கைக்குள் சந்திரிக்காவின் தலைமைத்துவ விம்பத்தை உருவாக்கியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான பத்திரிகையாக இருந்த திவயின பத்திரிகை அனுர பண்டாராநாயக்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தமையே இதற்கு காரணம்.
அந்த காலத்தில் சிங்கள ஊடகத்துறையில் முதல் தர ஊடாக நிறுவனமாக திவயின பத்திரிகை குழுமமே இருந்து வந்தது. அந்த காலத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பன அரசிடம் மாத்திரமே இருந்தன. தனியார் தொலைக்காட்சி ரணில் விக்ரமசிங்கவின் சகோதரருக்கு மட்டுமே இருந்தது. அது மஹாராஜா நிறுவனம் , ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்திடம் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று அவற்றை உருவாக்க முயற்சித்த வந்த ஆரம்ப காலம்.
இவை அனைத்துக்கும் மத்தியில் ராவய பத்திரிகை தனியாக போராட்டத்தை முன்னெடுத்தது. இதனை உணர்ந்துகொண்ட சந்திரிக்கா, தனது அரசியல் எதிர்காலம் மற்றும் பிரசார வழிமுறைகள் குறித்து அடிக்கடி விக்டர் ஐவனுடன் கலந்துரையாடி வந்தார். எப்படியோ விக்டர் ஐவனின் ராவய பத்திரிகை 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சந்திரிக்காவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரின் மூளையை சலவை செய்திருந்தது.
சிறிமாவே பண்டாரநாயக்கவே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர், ராவய கூறுவது சரிதான் என எண்ணினர். அந்த காலத்தில் விக்டர் ஐவனை போன்று மஹாராஜாவும் சந்திரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார்.
மஹாராஜா அன்று பிரதி சபாநாயகராக இருந்த காமினி பொன்சேகாவை சந்திரிக்காவுடன் இணைத்தார். பிரேமதாசவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் முக்கிய பாத்திரமாக விளங்கிய காமினி பொன்சேகா, 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் தேர்தல் மேடையில் பிரபலமான நட்சத்திரமாக விளங்கினார். டி.பி. விஜேதுங்க பிரேமதாசவின் ஆதரவாளர்களை துரத்தி துரத்தி தாக்கியதன் காரணமாகவே காமினி பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
ரணசிங்க பிரேமதாசவின் அழைப்பின் பேரிலேயே காமினி பொன்சேகா அரசியலுக்கு வந்தார். அவர் பிரேமதாசவின் அரசாங்கத்தில் பிரதி சபாநாயகராக பதவி வகித்த போது விக்டர் ஐவனின் ராவய பத்திரிகை காமினி பொன்சேகாவுக்கு தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை தொடுத்து வந்தது. காமினியும் பதிலுக்கு தாக்குதல் தொடுத்தார். இந்த மோதல்கள் காரணமாக காமினி பொன்சேகா, சந்திரிக்காவின் மேடையில் ஏறியதை விக்டர் ஐவன் விரும்பவில்லை.
காமினி சந்திரிக்காவின் மேடையில் பிரபல நட்சத்திரமாக நாடு முழுவதும் வலம் வரும் போது, விக்டர் ஐவன் சந்திரிக்காவுக்கு ஆதரவளித்து காமினி மீது தாக்குதல் தொடுத்தார். காமினியும் சந்திரிக்காவின் மேடையில் விக்டர் ஐவனை தாக்கினார். எனினும் சந்திரிக்கா இருவருக்கும் இடையிலான மோதலில் தலையிடாது விக்டர் ஐவன் மற்றும் காமினி ஆகியோரை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
சந்திரிக்கா, காமினி பொன்சேகாவை தேசிய பட்டியலில் சேர்த்திருந்தாலும் வெற்றி பெற்ற பின்னர், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கவில்லை. இதற்கு விக்டர் ஐவனின் அழுத்தங்கள் காரணமாக இருந்ததா என்பது தெரியவில்லை. எனினும் சந்திரிக்கா, காமினி பொன்சேகாவை வடக்கு,கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தார். அப்போது சந்திரிக்காவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் காமினி பொன்சேகா மாத்திரம், விக்டர் ஐவனின் எதிரியாக இருக்கவில்லை.
சந்திரிக்காவின் அரசியல் பிரசார வேலைத்திட்டத்தில் பிரதான பத்திரம் வகித்த பிரபல நடிகர் சனத் குணதிலக்கவும் விக்டர் ஐவனின் தாக்குதலுக்கு உள்ளானார். சனத் குணதிலக்க அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார். சனத் குணதிலக்கவும் ரணசிங்க பிரேமதாசவின் அழைப்பின் பேரிலேயே அரசியலுக்குள் வந்தார்.
பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், விஜேதுங்க பிரேமதாச ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை தொடுத்த காரணத்தினால், அவரும் அதிருப்தியடைந்து, காமினியை போல் சந்திரிக்காவின் மேடையில் ஏறினார். சந்திரிக்காவின் சுவரொட்டி புகைப்படங்களை வடிமைக்கும் பொறுப்பை சனத் குணதிலக்க ஏற்றிருந்தார். சந்திரிக்காவின் அழகான சுவரொட்டிகளை சனத் குணதிலக்கவே வடிவமைத்திருந்தார். பிரசாரக் குழுவிலும் விக்டர் ஐவனும் சனத் குணதிலக்கவும் மோதல்களை ஏற்படுத்திக்கொண்டனர்.
1994 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்த மோதல்களை கண்டும் காணாதவர் போல் சந்திரிக்கா இருந்து வந்தார். இந்த நிலையில், சந்திரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவருக்கு நெருக்கமான அரசியல் தோழராக இருந்த மங்கள சமரவீர, சனத் குணதிலக்கவுடன் சேர்ந்துக்கொண்டார். விக்டர் ஐவனின் தாக்குதல்களை சந்திரிக்காவாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதே இதற்கு காரணமாக அமைந்தது.
விக்டர் ஐவன் மீது பதில் தாக்குதல் தொடுக்க மங்களவும் சனத்தும் இணைந்துக்கொண்டனர். அப்போது சந்திரிக்கா, மங்கள மற்றும் சனத் குணதிலக்க ஆகியோருக்கு சார்பான நிலையை எடுத்தார். இறுதியில் விக்டர் ஐவன் சந்திரிக்காவை துரத்தி, துரத்தி தாக்குதல் தொடுத்ததுடன் இதன் இறுதி முடிவாக சந்திரிக்காவுக்கு எதிராக புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சமையலறை அமைச்சரவையின் இரண்டு பிரதான பாத்திரங்களான காட்சி ஊடக உரிமையாளர் திலித் ஜயவீரவுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தரவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை பார்க்கும் போது இந்த பழைய கதைகள் நினைவுக்கு வந்தன.
குறித்த சிங்கள காட்சி ஊடகத்தின் உரிமையாளர் 2004 ஆம் ஆண்டு சந்திரிக்கா-ஜே.வி.பி கூட்டணியின் பிரசார திட்டம் ஊடாக அரசியல் களத்திற்குள் வந்தார். அதற்கு முன்னர், மங்கள சமரவீர மற்றும் சனத் குணதிலக்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மங்களவின் சகோதரின் பிரசார நிறுவனம் பிரசாரங்களை கையாண்டு வந்தது. மங்கள மற்றும் ஜே.வி.பி இடையிலான கடும் பிணைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட, ஜே.வி.பியின் விம்பத்தை கட்டியெழுப்ப மங்கள முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும், சந்திரிக்கா அரசாங்கத்தை இழந்த 2002-2004 ஆம் ஆண்டு காலத்தில் சந்திரிக்காவை மற்றுமொரு பிரசார பீரங்கியான சரத் அமுனுகம நெருங்கினார்.
அமுனுகம ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத் திட்டத்தில் முன்னிலையில் இருந்தவர் என்பதுடன் காமினி திஸாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவர். 1991 ஆம் ஆண்டு காமினி திஸாநாயக்க, பிரேமதாசவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய போது, அமுனுகம, காமினியுடன் சென்றார். பிரேமதாசவின் மரணத்திற்கு பின்னர், அமுனுகம மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க , அவருக்கு உரிய இடத்தை வழங்கவில்லை. இதனையடுத்து அமுனுகம, சந்திரிக்காவுடன் இணைந்துக்கொண்டார்.
அப்போது அமுனுகமவின் மகள் வருணி அமுனுகம மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் ட்ரை அட் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அமுனுகம, சந்திரிக்காவுக்கு இவர்களை அறிமுகம் செய்து வைத்தார். சந்திரிக்கா, இவர்களிடம் சந்திரிக்கா - ஜே.வி.பி கூட்டணியின் பிரசார பொறுப்பை இவர்களிடம் வழங்கினார். அது மிகவும் வெற்றிகரமான பிரசார திட்டமாக அமைந்தது.
சந்திரிக்கா மீண்டும் அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர், வருணி மற்றும் திலித் ஜயவீர ஆகியோருக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்களை வழங்கினார். திலித் ஜயவீரவின் காட்சி ஊடகம் சந்திரிக்காவின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா ஒதுக்கப்பட்டு, மங்களவின் தோளில் ஏறி மகிந்த களத்திற்கு வந்தார். மகிந்தவுக்கான மங்களவே பிரசாரம் செய்தார். சந்திரிக்காவின் தீவிர ஆதரவாளரான சரத் அமுனுகம, அவரது மகள் வருணி, திலித் ஜயவீர ஆகியோரின் பிரசார நிறுவனம், மகிந்தவால் ஓரங்கட்டப்பட்டது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் சகாவான மலிக் சமரவிக்ரம ஊடாக சந்திரிக்காவின் தலையீட்டில், சரத் அமுனுகமவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரணில் வெற்றி பெற்றால், தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இந்த பேச்சுவார்த்தை சில சுற்றுகள் வரை நடந்தன. அப்போது திலித் ஜயவீரவின் பிரசார நிறுவனமும், ரணிலின் வெற்றிக்காக யோசனைகளை முன்வைத்தது. அந்த காலத்தில் வருணி மற்றும் திலித் ஜயவீர ஆகியோரின் காட்சி ஊடகம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கவில்லை என்பதால், அந்த ஊடகத்தை பயன்படுத்த ரணிலோ, மகிந்தவோ அக்கறை காட்டவில்லை.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். நீண்டகாலம் செல்லவில்லை, மங்கள மகிந்தவிடம் இருந்து விலகினார். போர் உக்கிரமடைந்த போது, போர் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கும் தேவை பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு இருந்தது. அதற்கு பிரசார நடவடிக்கை அவருக்கு தேவைப்பட்டது. அவ்வாறான நிலையில், நமக்காக நாம் பிரசார திட்டத்தின் ஊடாக திலித் ஜயவீர, கோட்டாபயவுக்கு நெருக்கமானார்.
அந்த பிரசார திட்டம் படையினருக்கான உத்வேகத்தை வழங்கும் பிரசாரமாக அமைந்தது. 2010 ஆம் ஆண்டிலும் திலித் ஜயவீரவின் ஊடகம் போதுமான அளவிற்கு மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கவில்லை. எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவின் உரைகளை தொகுத்து வெளியிட்டதுடன் வெள்ளை கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்ப அந்த ஊடகம் முக்கிய பங்காற்றியதுடன் ராஜபக்சவினருக்கு ஆதரவாக பெரிய சேவையை செய்தது.
2015 ஆம் ஆண்டளவில் திலித் ஜயவீரவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அதிகரித்திருந்தன. இது 1993 ஆம் ஆண்டு சந்திரிக்காவுக்கும் விக்டர் ஜயவனுக்கும் இடையில் காணப்பட்ட நெருக்கமான தொடர்புகள் போன்றது. எனினும் அப்போது அவரது ஊடகம் மக்கள் மத்திய செல்வாக்கு செலுத்தும் ஊடகமாக இருக்கவில்லை. அப்போது இலங்கையில், சிரச, ஹிரு, சுவர்ணவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி என்பன முன்னிலையில் இருந்தன.
2015 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார். மகிந்தவுடன் எழுவோம் என்ற தலைப்பில், விமல், கம்மன்பில, வாதேவ, தினேஷ் குணவர்தன ஆகியோர் ஒழுங்கு செய்த நுகேகொடை பொதுக் கூட்டத்தை திலித் ஜயவீரவின் தெரண ஊடகம் அச்சமின்றி நேரலையில் ஒளிப்பரப்பியது. இதனையடுத்து ஒரே இரவில் அது நாட்டின் முதன்மை நிலை ஊடகமாக மாறியது.
மகிந்த காற்றின் மூலம் அந்த ஊடகம் முழு நாட்டை ஆக்கிரமித்து கொண்டது. மகிந்த ஆதரவாளர்களுக்கு அந்த ஊடகமின்றி இருக்க முடியவில்லை. அந்த ஊடகத்திற்கு மகிந்த இன்றி இருக்க முடியவில்லை. இந்த காலத்திலேயே திலித் ஜயவீர கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். 2019 ஆம் அண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு இருந்த பலத்திற்கு நிகரான பலம் திலித் ஜயவீரவின் ஊடகத்திற்கும் இருந்தது.
திலித் துரும்புச் சீட்டை வீசினார். கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளரானார். வரலாற்றில் சாதாரணமாக ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் திரைக்கு பின்னால் இருந்தே தலைமைத்துவத்தை நிர்மாணித்தனர். விக்டர் ஐவன் கூட பகிரங்கமாக சந்திரிக்காவுக்காக குரல் கொடுக்கவில்லை. எனினும் கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய அமெரிக்க சென்ற போது, திலித் ஜயவீரவும் சென்றார். அவர், கோட்டாபயவின் வெற்றிக்காக இறங்கி விளையாட்டை ஆடினார்.
கோட்டாபயவின் வெற்றியின் பெருமையை காட்டும் புகைப்படம் அவரது முகநூலில் வெளியிடப்பட்டது. கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானது, அவரது செயலாளரை நியமிக்கும் பொறுப்பை மகிந்த கையில் எடுத்தார். மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பீ.பி. ஜெயசுந்தரவையே அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.
ராஜபக்ச குடும்பத்தினருடன் இரத்த உறவு இல்லாவிட்டாலும் அரசியல் இரத்த உறவு கூறும் இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் விமல் வீரவங்ச மற்றவர் பீ.பி. ஜெயசுந்தர. 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வரும் போது, மகிந்தவுக்கும், ராஜபக்ச குடும்பத்தினருக்கு பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தை கையாளும் அறிவு இருக்கவில்லை. அந்த குறையை பீ.பி. ஜெயசுந்தரவும், லலித் வீரதுங்கவும் போக்கினர்.
லலித் வீரதுங்க சில் துணி வழக்கில் சிக்கி இருப்பதால், பீ.பி. ஜெயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என ராஜபக்சவினர் தீர்மானித்து இருக்கலாம். நீண்டகாலம் செல்லும் முன்னர், பீ.பி. ஜெயசுந்தர, கோட்டாபயவின் பொருளாதாரம் மற்றும் நிர்வாக அனுபவமின்மையை போக்கினார். கோட்டாபயவுக்கு பீ.பி. ஜெயசுந்தர இல்லாமல் இருக்க முடியவில்லை.
கோட்டாபய ஜனாதிபதியாக பதவிக்கு வரும் பின்னர் அவரை சூழ்ந்து காணப்பட்ட திலித் ஜயவீர உள்ளிட்டோரை விட, ஜயசுந்தர பலமிக்கவராக மாறினார். பீ.பி. ஜெயசுந்தர அமைச்சர்கள் கூறுவதை மாத்திரமல்ல, மகிந்த ஜனாதிபதியாகவும் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்திலும் மகிந்த சொல்வதை கேட்பதில்லை. எனினும் மகிந்த, ஜெயசுந்தர மீது கைவைக்க பயந்தார். கோட்டாபயவுக்கு தற்போது அந்த பயமே இருக்கின்றது. அன்று மகிந்தவை போல் இன்று கோட்டாபயவும், தமது அரசியல நிகழ்ச்சி நிரலுக்கு பொருத்தமான வகையில் பொருளாதாரத்தையும் அரசாங்கத்தை கையாள்வது பீ.பி. ஜெயசுந்தர என நினைக்கின்றார்.
மகிந்தவின் காலத்தில் ஜெயசுந்தரவுடன் விமல் வீரவங்ச மோதினார். மகிந்த அந்த மோதலை சமன் செய்தார். எனினும் தற்போது ஜெயசுந்தரவுடன் மோதுவது, கோட்டாபயவை அரசியல் பாத்திரமாக உருவாக்கிய திலித் ஜயவீர. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றிருந்த நேரத்தில், திலித் தனது முகநூல் பீ.பி. பதவியில் இருந்தது போதும் என பதிவிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பியதும் பீ.பி. ஜெயசுந்தர பதவி விலகுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனினும் அவர் பதவி விலக வில்லை. ஜனாதிபதி அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த போதும் திலித் ஜயவீர, ஜெயசுந்தரவுக்கு வெட்கமில்லை என்று உணர்த்தும்படியான பதிவு ஒன்றை முகநூலில் பதிவிட்டார். அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரும் போது, ஜெயசுந்தர பதவி விலகாமல் இருக்கின்றார் என்ற அர்த்தத்தில் அந்த பதிவு காணப்பட்டது.
2022 ஆம் ஆண்டு பிறக்கும் ஜெயசுந்தரவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவார் என பலரும் நினைக்கின்றனர். மகிந்த, பீ.பி. ஜெயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு பரிந்துரைத்தாலும் கோட்டாபய மற்றும் ஜெயசுந்தர இடையிலான உறவை வலுப்படுத்த ஜனாதிபதியிடம் மற்றுமொருவர் இருக்கின்றார். அவர் மிலிந்த மொரகொட. அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் கோட்டாபயவின் நடவடிக்கையில் மிலிந்த பிரதான பங்கு வகித்தார்.
இந்தியாவை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய, மிலிந்த மொரகொடவிடமே வழங்கியுள்ளார். ஜெயசுந்தர, மிலிந்தமொரகொடவின் உற்ற நண்பர். சந்திரிக்காவின் அரசாங்கத்தில் பொருளாதாரத்திற்கு பொறுப்பாக இருந்த ஜெயசுந்தர, 2002 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் அரசாங்கம் வீழ்ந்த போது வீழ்ந்தார்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சு பொறுப்பை வகித்த மிலிந்த மொரகொட, ஜெயசுந்தரவை அரச நிறுவனம் ஒன்றின் பிரதான பதவிக்கு நியமித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக சர்வதேசத்தை முகாமைத்துவம் செய்யும் மிலிந்த மொரகொட, தற்போதும், ஜெயசுந்தரவின் நெருங்கிய நண்பர். இப்படியான அரசியல் சதுரங்க பலகையில் விளையாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, திலித் ஜயவீரவுக்காக பீ.பி. ஜெயசுந்தரவை கைவிடுவாரா?. அது ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மட்டுமே தெரியும்.
கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
