ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் 'கறுப்பு ஜனவரி' போராட்டம்! (photos)
படுகொலை செய்யப்பட்ட, தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தும் 'கறுப்பு ஜனவரி' கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (27) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகாலையில் நடைபெற்றது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில் ஊடக, சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா வங்கி ஊழியர் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படும் ‘கறுப்பு ஜனவரி’யை முன்னிட்டு மட்டக்களப்பில் கடும் மழைக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனவரி மாதம், இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுகூரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கறுப்பு சீலை வாயில் அணிந்துகொண்டு அமைதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கமே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து,ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதி, ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடு,காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துபோன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இன்றைய போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர்
கலந்துகொண்டனர்.









இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
