நவம்பர் 11ஆம் திகதி மட்டுமே எரிபொருள் கையிருப்பில்! பெட்ரோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தகவல்
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருக்கும் எரிபொருள் கையிருப்பானது எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை மாத்திரமே போதுமானது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எரிபொருளை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியே மீண்டும் வரவுள்ளது எனவும் தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
எரிபொருள் நெருக்கடி இருப்பதாகவும் அதனை அடுத்த சில தினங்களில் தெளிவாக காணக் கூடியதாக இருக்கும் எனவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டை பற்றி நினைத்து, இந்த தகவலை வெளியிடாது இருக்கு எந்தளவுக்கு முயற்சித்தாலும் அதனை மேலும் சில தினங்களுக்கு மாத்திரமே செய்ய முடியும் என வணிக கைத்தொழில் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெட்ரோலியக் கூட்டுத்தாபன கிளையின் தலைவர் பந்துல சமன்குமர தெரிவித்துள்ளார்.
அடுத்த சில தினங்களுக்கு தேவைப்படும் போதுமான கச்சாய் எண்ணெய் இல்லாத காரணத்தினால், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் எண்ணெய் சுத்திகரிப்பு வேகம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கை வந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் தற்போது எரிபொருள் நெருக்கடி இல்லை எனவும் கடந்த சில தினங்களில் நுகர்வோர் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொண்டதால், பயன்பாடு அதிகரித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.