பெருந்தொகை டீசலுடன் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட உழவு இயந்திரம்
அக்கரைப்பற்று - பட்டியடிப்பிட்டி இராணுவச்சாவடி அருகில் 25 சிறிய கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்புநிலையமொன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் சிறிய டீசல் கொள்கலன்களே இவ்வாறு பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த நிலையமொன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று நண்பகல் 25 சிறிய கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டு அக்கரைப்பற்று பிரதேசம் நோக்கி புறப்படுவதாக பொதுமக்கள் அறிந்து கொண்டதுடன் பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகே ஒன்று கூடிய மக்கள் உழவு இயந்திரத்தை தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் ஆவணங்களை கையளித்துள்ள விவசாய அமைப்புக்கள்
இந்நிலையில் அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றி அதில் உள்ள கலன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு உழவு இயந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் பொலிஸ் நிலையம் வருகை தந்த சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவை தங்களது அமைப்பிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன்,அதற்கான ஆவணங்களையும் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விவசாய அமைப்புக்களுக்கு இவ்வாறு மொத்தமாக டீசலை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டா? அவ்வாறெனில் அனுமதியை வழங்கியது யார்? வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் காத்திருக்க இது போன்ற செயற்பாடுகள் முறையானதா? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றை நேற்று
ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த
550 லீட்டர் டீசல், 258 லீட்டர் மண்ணெண்ணை என்பனவற்றை மீட்டதுடன், ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார
தெரிவித்துள்ளார்.