சமூகத்தில் சுற்றித்திரியும் நான்கு மடங்கு கோவிட் தொற்றாளர்கள்
நாட்டின் கோவிட் நோயாளிகளைக் கண்டறிவதற்கான போக்கு தற்போது கைமீறிச்செல்வதாக தோன்றுகிறது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிகாரிகள் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ,இதைத் தீர்ப்பதற்கு மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
நாளாந்தம் 1,800க்கும் அதிகமான கோவிட் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் நிலையில் சமூகத்தில் கண்டறியப்படாத தொகை, அதில் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளின் படுக்கைகளின் அளவுத்திறன் படிப்படியாக குறைந்து வருகிறது.
மருத்துவமனைகள் கிட்டதட்ட நிரம்பியுள்ளன. இதன் விளைவாக, சிலர் நோயாளிகளை வீடுகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.
எனவே சுகாதார அதிகாரிகள், நோயாளிகள் தமது வீடுகளில் எவ்வாறு
நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும்
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பத்ம குணரத்ன கோரியுள்ளார்.