உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் குழுக்கள் தொடர்புகளை கொண்டிருப்பதாக தாம் கூறவில்லை - கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் குழுக்கள் நேரடியாக தொடர்புகளை கொண்டிருப்பதாக தாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறவில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது கருத்துக்கள் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது. அத்துடன்; சர்வதேச சக்திகளும் இந்த தாக்குதல்களின் பின்னால் இருக்கின்றன என்று தாம் கூறியபோதும் உள்ளூர் அரசியல் குழு எதனையும் தாம் குறிப்பிடவில்லை என்று கர்தினால் குறிப்பிட்டார்.
ஆயுதங்களை தயாரித்து வஹாபிசம் போன்ற மத மற்றும் இன தீவிரவாதங்களைப் பயன்படுத்தும் சில சக்திகள் உள்ளன .தமது ஆயுதங்களை சந்தைப்படுத்துவதற்காக இந்த செயல்களை வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்கின்றன.
முஸ்லிம்களில் ஒரு சிறிய குழுவினர் மட்டுமே தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் பிற இன மற்றும் மதக் குழுக்களுடன் இணைந்து வாழ்ந்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களிடம் அந்த சகவாழ்வைப் பேணுவதற்கும் கற்பிப்பதற்கும் தாம் வேண்டுகோள் விடுப்பதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் 20 வது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுதலுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முஸ்லீம் அரசியல் கட்சியின் தலைவர் 20 வது திருத்தத்திற்கு எதிராக
வாக்களித்தார்,மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் ரிஷாத் பதியுதீனின் சகோதரரை
விடுவித்தமை போன்ற அனைத்து நிகழ்வுகளும் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக
இருக்கலாம் என்றும் கர்தினால் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.